தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்துள்ள நடிகை ஷோபனாவுக்கு சென்னை தேனாம்பேட்டையில் வீடு உள்ளது. மேலே, ஷோபனாவின் தாயார் ஆனந்தம் வசித்து வருகிறார். கீழே ஷோபனாவின் நாட்டிய பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
இந்நிலையில், மலையாள படங்களில் அதிகமாக நடித்து வரும் நடிகை ஷோபனா அடிக்கடி கேரளாவுக்கு சென்று விடுவார். அதுபோன்ற சமயங்களில் தனது தாயாரை கவனித்துக் கொள்ள ஒரு ஆள் வேண்டுமே என நினைத்து விஜயா என்பவரை வேலைக்கு சேர்ந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே தனது அம்மாவின் பணம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போவதை கவனித்த நடிகை ஷோபனா இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸாருக்கு போன் மூலம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வீட்டுக்கு வந்து சோதனை செய்த போலீஸார் பணிப்பெண் விஜயாவிடம் விசாரணை நடத்தியதும் போலீஸை பார்த்த அதிர்ச்சியில் தான் திருடியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
டிரைவர் முருகன் என்பவர் மூலமாக ஜீபேவில் தனது மகள் வங்கி கணக்கு பணத்தை அனுப்பி வந்ததை போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டுள்ளார் விஜயா. இத்தனை நாட்கள் நம்பிக்கையோடு அம்மாவை கவனித்துக்கொள்ள வைத்த பணிப்பெண் கொஞ்சம் கொஞ்சமாக 41 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை திருடிய விவரம் ஷோபனாவிற்கு தெரிவிக்கப்பட்டது.
கையும் களவுமாக விஜயா மாட்டிய நிலையிலும், அவர் மீது எந்தவொரு ஆக்ஷனும் எடுக்க வேண்டாம் என நடிகை ஷோபனா போலீஸாரிடம் தெரிவித்து விட்டாராம். மேலும், தொடர்ந்து தனது வீட்டிலேயே வேலை செய்யட்டும் என்றும் அவர் திருடிய பணத்தை அவரது சம்பளத்தில் இருந்து பிடித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளாராம் நடிகை ஷோபனா.